Gandhi (1)

கேரளத்தின் முக்கியமான சிந்தனையாளர்களில் ஒருவராகிய எம்.கோவிந்தனுடன் பேசிக்கொண்டிருக்கையில் அவர் சொன்னார் ‘காந்தி சுடப்பட்டபின்பும் உயிருடன்தான் இருந்தார். ஏனென்றால் அவர் ஒரு மனிதன் மட்டுமல்ல, ஒரு கருத்து. ஒரு மெய்ஞானத்தின் பருவடிவம். அதை ஒரு வெறும் பருப்பொருளான துப்பாக்கிக் குண்டு எப்படி அழிக்க முடியும்? துப்பாக்கிக் குண்டு ஊடுருவியதும் காந்தி உருமாறினார் என்று சொல்லலாம். அதுவரை ஒரு மனிதனாகவும் அவன் சொல்லும் கருத்தாகவும் இருந்தவர் வெறும் கருத்தாக எஞ்சினார். அந்த மனிதனின் குரலாகப் பார்க்கப்பட்ட அந்தக்கருத்து அந்த மனித ஆளுமையில் இருந்து விடுதலை அடைந்தது. தூய்மையான கருத்து மட்டுமாக ஆகியது. தன்னுடைய சொந்த பலத்தால் நிற்க ஆரம்பித்தது. ’
‘….ஆனால் அது இரண்டு நாட்களுக்குத்தான். அதன்பின் அந்தக்கருத்து கொல்லப்பட்டது. அதைச்செய்தவர்கள் காந்தியின் சீடர்கள். அவர்கள் அந்தச் சடலத்தை ஒரு பீரங்கிவண்டியில் ஏற்றினார்கள். அந்த பீரங்கிவண்டியில் ஆர்ப்பாட்டமான மலர் அலங்காரங்களுடன் அதிகாரபூர்வ ராணுவ அணிவகுப்புடன் ராஜமரியாதைகளுடன் டெல்லியின் ராஜவீதிகள் வழியாக அந்தச்சடலம் கொண்டுசெல்லப்பட்டபோது காந்தி என்ற கருத்துவடிவம் கொல்லப்பட்டது. அதைக்கொண்டாடும்படியாக மரியாதைக்குண்டுகள் வெடித்து வானத்தில் எதிரொலித்தன. ’காந்தி இறந்தார், வாழ்க காந்தி’ என்று இந்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது.’

No comments:

Post a Comment